தமிழ்
கவிஞர்: ஐங்கரன் சிவப்பிரகாசம்
📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
தங்கத் தமிழே, அடி எங்கள் தமிழே,
நீ எங்கும் பரவக் கண்டேன்…
எந்தன் மனமும், பிஞ்சு நெஞ்சும்
உன்னில் உருகக் கண்டேன்…
எதுகைத் தொடையுமந்த
மோனைத் தொடையுமிங்கே
மின்னி மினுக்கக் கண்டேன்…
இரட்டைக் கிளவியும் அடுக்குத் தொடருமே
அழகு சேர்க்கக் கண்டேன்…
உனக்கு அழகு சேர்க்கக் கண்டேன்…
செம்மொழியாக, செழுமைக் கொண்டு, என்
நாவில் புகுந்துக் கொண்டாய்;
கொங்கு தமிழாகக் கொஞ்சி விளையாடி,
என் நெஞ்சம் புகுந்துக் கொண்டாய்…
ஆதி முதலாக வந்த போதிலும்,
இளமை கொஞ்சக் கண்டேன்;
உன்னில் இளமை கொஞ்சக் கண்டேன்…
உன் இளமை கண்டு நான்
ஏங்கி ஏங்கியே
காதல் கொஞ்சம் கொண்டேன்;
உன்மேல் காதல் கொஞ்சம் கொண்டேன்…
காதல் முற்றியே,
காதல் முற்றியே,
பித்துப் பிடித்துப் போனேன்…
பித்து பிடித்ததால், பிஞ்சு நெஞ்சினில்
கவியும் வழியக் கண்டேன்…
என் பிஞ்சு நெஞ்சினில்
கவியும் வழியக் கண்டேன்…
இளமை வள்ளலாய், எந்தன் உயிருமாய்,
இனிய இனிய தமிழே, உலகம் இயங்கும் வரை,
உந்தன் ஆட்சியே
ஓங்கி ஒலிக்கும் என் தமிழே….!