கவிஞர்: ப.ஹரீஸ்
📚 ₹1500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
தமிழுக்குச் சாரதியே! தலைவனான பாரதியே!
உமிழ்க்கூட இனித்தாடும்! குமிழ்க்கூட உனைத்தேடும்!
உன்வீட்டில் உட்கார்ந்தால் ஊமையும் கவிபாடும்!
வெண்ணாற்றில் மடையுடைந்து வெள்ளமாய் வழிந்தோடும்!
மொழிவானில் நீயும்விண் மீனல்ல நிலாவே!
பிழையில்லாக் கவிசெய்யப் பிறந்துவந்த உலாவே!
கலையுள்ள சுவையாகக் கட்டிவைத்த பலாவே!
நிலையாக உனக்கிங்கு நிகழ்த்தவேண்டும் விழாவே!
குட்டித் தவளைகள்
குறட்டைகள் விட்டு!
கட்டில் உறக்கங்கள்
கலைந்தது போல!
பித்தனே உன்றன்
புத்தகம் சுவைக்க
எத்தனை இரவுகள்
இழந்து போனேன்!
அத்தனை இரவும்
அர்த்தம் உள்ளதாய்ப்
பித்தனே நானும் பின்னால் புரிந்தேன்!
புல்லரிக்கும் வித்தையைப் போதித்த புலவன் நீ!
எல்லோர்க்கும் கவிதையை
ஏற்றுவித்த வளவன் நீ!
கம்பனுக்கு உகந்தது கலிவிருத்தம் என்பார்!
உன்றனுக்கு உகந்ததோ ஒருநூறு என்பேன்!
சந்தத்தை எழுத்தோடு சமைக்கின்ற உன்னை
விந்தையாய் எண்ணுகிறேன் விரல்விட்டு என்றும்!
கவிக்கணக்குக் கணிப்போர்க்கு வாய்ப்பாடு உன் பாட்டு!
புவியுள்ளே சொர்க்கத்தைப் புசித்தாரே கவிக் கேட்டு!
தங்களுக்காய்க் கவியினைத் தேடுபவன் தகாக்கவிஞன்!
எங்களுக்காய்க் கவியினை ஏற்றினாய் நீ மகாகவிஞன்!
ஒன்றிலே ஒன்றையே ஒழித்தால் மதிப்பில்லை!
உன்னையும் கவியையும் உடைத்தால் தமிழில்லை!