தமிழும் பாரதியும்
கவிஞர்: நல்லுசாமி
📚 ₹1500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
கொஞ்சு தமிழ் நெஞ்சமெல்லாம் கொண்டிருந்த பாரதி
கொடுமைகளை கண்டு மனம் கொதித்து எழுந்த கோபத் தீ
அன்பு கொண்ட பார்வையோடு அனைவரையும் நேசித்தார்
பண்பு கொண்ட நெறியோடு பகுத்தறிவும் போதித்தார்.
சாத்திரத்தின் மூத்த பொய்கள் அத்தனையும் சாடினார்
சமத்துவமே என்ற பாட்டில் எப்பொழுதும் பாடினார்
காக்கை குருவி எல்லாம் எந்தன் சாதி என்று பாடினார்
காலம் முழுதும் கவிஞர் இவர் இப்படியே வாடினார்.
நாட்டுக்குப் பாட்டெழுதி நாயகனாய் வாழ்ந்த கவி
பாட்டுக்குள் புது நெறியை புகுத்திவிட்ட புரட்சிக் கவி
ஏட்டுக்குள் அதுவரைக்கும் யாரும் இதை செய்ததில்லை
எளிய மக்கள் அறியும்படி கவிதை அன்று படைக்கவில்லை.
சொல்லச் சொல்ல இனிக்குதய்யா உன்னுடைய கவிதை
அள்ள அள்ள குறையாத அழகு தமிழ் இனிமை
சுறுசுறுப்பாய் இருக்குதையா சொற்கள் அங்கு புதுமை
இடி முழக்கம் ஆகுதய்யா வீரம் தரும் தன்மை.
எத்தனை எத்தனை துன்பங்களில் எண்ணல் பட்ட போதும்
எத்தனை கோடி இன்பம் என்று கவிதை இன்பம் படைத்தாய்
எத்தனை காலம் ஆனபோதும் கவிதையாக வாழ்வாய்
சத்தியமாக நிச்சயமாக கவிதையாக வாழ்வாய்.